மாலைமேளம்
கிராம் தங்க நகைக்காக கொலை
சென்னை டிசம்பர்,26,2064 : சென்னை வளசரவாக்கம் நேதாஜி தெருவில் வசித்து வந்தவர் தமிழ்செல்வி வயது 60; குடும்பத்தினர் யாருமின்றி தனிமையில் வசித்து வந்தார் இந்த மூதாட்டி. அவரது வீட்டுக்கு அருகில் வசிப்பவர் காமாட்சி வயது 58. காமாட்சியுடன் தமிழ்செல்வி அவ்வப்பொழுது சமையல் கூலிவேலைக்கு வேலைக்கு செல்வது வழக்கம். இன்று காலை வேலைக்காக தமிழ்செல்வியை அழைக்க அவரது குடிசைக்குள் சென்றுள்ளார் காமாட்சி. அங்கு தலையில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார் தமிழ்செல்வி. அவரது காதுகளிலும் மூக்கிலும் நககீறல்களுடன் ரத்த காயங்கள் இருந்தன. அவர் அணிந்திருந்த தோடு, மூக்குத்தி போன்றவற்றை திருட இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது. இந்த கொலையை துப்பறியும் காவல் துறை ஆய்வாளார் பால்ராஜ் கூறுகையில்...............................................................................................................................................தினச்செய்தி
காதலித்து கைபிடித்த கணவனின் காலை கல்லை தூக்கிபோட்டு உடைத்த மனைவி
சென்னை டிசம்பர்,27,2039 : சென்னை வளசரவாக்கம் கோதை நகரில் வசித்து வருபவர் தமிழ்செல்வி, வயது 35. இவரது கணவர் கோவிந்தன், வயது 38. இவர்களுக்கு ஆனந்த் (5), ஆனந்தி(3) என்று இரு குழந்தைகள் உண்டு கோவிந்தன் சென்னையில் உள்ள தனியார் எக்ஸ்போர்ட் கம்பெனியில் சூப்ரவைசராக வேலை செய்கிறார். அதே கம்பெனியில் தினசரி கூலிவேலை பார்த்து வந்தார் தமிழ்செல்வி. வேலை செய்யும் இடத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்து கடந்த 2029 ஆண்டு திருமணத்தில் முடிந்தது. இந்நிலையில் குடிக்கு அடிமையான கோவிந்தன் சம்பவம் நடந்த திங்கட்கிழமை இரவு குடித்துவிட்டு தமிழ்செல்வியை தகாத வார்த்தைகளால் திட்டி இருக்கிறார். கடந்த ஆறு மாதமாகவே தமிழ்செல்வியின் நடத்தையில் சந்தேகம் கொண்டும் இருந்திருக்கிறார் கோவிந்தன். நேற்று போதையில் மிக மூர்க்கமாக நடந்துகொண்ட கோவிந்தனின் காலில் அம்மிக்கல்லை போட்டு காலை உடைத்தார் தமிழ்செல்வி. உடனே அருகில் குடி இருந்தவர்கள் ஓடி வந்து கோவிந்தனை பக்கத்தில் இருக்கும் மருத்துவமனையில்............
தீப்பொறி
காதலிக்க மறுத்த பெண்ணின் மீது ஆசிட் வீச்சு
சென்னை டிசம்பர் 27, 2025: சென்னை புதுப்பேட்டை வேளாங்கண்ணி தெருவில் வசித்து வருபவர் நாராயணன், வயது 44. தச்சு தொழில் செய்து வந்தார். இவருக்கு அலமேலு(42) என்கிற மனைவியும், பூங்கோதை(22), தமிழ்செல்வி(21), கனகவல்லி(18) என மூன்று மகள்களும் உள்ளனர். இதில் தமிழ்செல்வி வயது , பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு சென்னையில் உள்ள எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சம்பவம் நடந்த வெள்ளிகிழமை அன்று வழக்கம் போல வேலைக்கு செல்ல பேருந்து நிலையத்தில் நின்றிருக்கிறார் தமிழ்செல்வி. அப்பொழுது அவரை ஒரு தலையாக காதலித்த ரவிகுமார்(24) என்பவர் முட்டையில் ஆசிட் வைத்து தமிழ்செல்வி மீது வீசி இருக்கிறார். தமிழ்செல்வி சுதாரித்ததால் அது அவரது தோள்ப்பட்டையில் விழுந்திருக்கிறது. பேருந்து நிறுத்தத்தில் நின்ற உடன் வேலை செய்பவர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.கைது செய்யப்பட்ட ரவிக்குமார் தான் கடந்த இரண்டு வருங்களாக தமிழ்செல்வியை காதலித்து.............
தினக்குயில்
மாணவியிடம் ஆசிரியர் அத்துமீறல்
சென்னை டிசம்பர் 28, 2016: சென்னை ராயபுரம் தண்டு மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் நாராயணன். இவரது மகள் தமிழ்செல்வி வயது . இவர் அருகில் உள்ள அறிஞர் அண்ணா பெண்கள் மேல்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவரது வகுப்பு ஆசிரியர் அன்பழகன் வயது . கடந்த ஆறு மாதமாகவே தமிழ்செல்வியிடம் தாகத வார்த்தைகள் பேசியுள்ளார் அன்பழகன். சம்பவம் நடந்த திங்கள் அன்று அன்பழகன் தமிழ்செல்வியை பள்ளி முடிந்தவுடன் வந்து பார்க்குமாறு சொல்லி இருக்கிறார். அன்பழகனை பார்க்க சென்ற தமில்செல்வியிடம் தாகத வார்த்தைகளை கூறி உள்ளார் அன்பழகன். மேலும் அவரது வீட்டுக்கு வருமாறு வற்புறுத்தி இருக்கிறார்......................................................................................................
தினமகள்
சுனாமியில் தப்பித்த தெய்வ குழந்தை
சென்னை டிசம்பர் 28, 2004: சென்னை அமைதிக்குப்பம் எம்.ஜி.ஆர் தெருவில் வசித்து வருபவர் நாராயணன் வயது . இவரது மனைவி அலமேலு வயது. இவர்களுக்கு பூங்கோதை என்ற ஒரு வயது மகள் உண்டு. சென்னையை சீரழித்த சுனாமி வந்த ஞாயிறு அன்று பிரசவத்திற்காக அருகில் இருந்த மகப்பேறு நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் அலமேலு. அன்று காலை தாகிய பிரமாண்ட ஆழிபேரலையில் அந்த மகப்பேறு நிலையம் முற்றிலும் சேதமாகியது. இருந்தாலும் கடவுளின் கிருபையால் அலமேலுவுக்கும் அவருக்கு அப்பொழுதே பிறந்த குழந்தைக்கும் சிறு பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த நம்பமுடியாத அதிசியத்தை பற்றி கணவர் நாராயணன் கூறுகையில்........................
நீதி : அதெல்லாம் பெரிசா ஒண்ணுமில்லை, இந்த பாரத தேசத்தில் பெண்கள் ஒருமுறை தான் பிறக்கிறார்கள்; ஆனால் தினம் தினம் இறக்கிறார்கள், அவ்வளவு தான்.!