Monday, December 26, 2011

செய்திகள்.!

மாலைமேளம்
கிராம் தங்க நகைக்காக கொலை
சென்னை டிசம்பர்,26,2064 : சென்னை வளசரவாக்கம் நேதாஜி தெருவில் வசித்து வந்தவர் தமிழ்செல்வி வயது 60; குடும்பத்தினர் யாருமின்றி தனிமையில் வசித்து வந்தார் இந்த மூதாட்டி. அவரது வீட்டுக்கு அருகில் வசிப்பவர் காமாட்சி வயது 58. காமாட்சியுடன் தமிழ்செல்வி அவ்வப்பொழுது சமையல் கூலிவேலைக்கு வேலைக்கு செல்வது வழக்கம். இன்று காலை வேலைக்காக தமிழ்செல்வியை அழைக்க அவரது குடிசைக்குள் சென்றுள்ளார் காமாட்சி. அங்கு தலையில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார் தமிழ்செல்வி. அவரது காதுகளிலும் மூக்கிலும் நககீறல்களுடன் ரத்த காயங்கள் இருந்தன. அவர் அணிந்திருந்த தோடு, மூக்குத்தி போன்றவற்றை திருட இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது. இந்த கொலையை துப்பறியும் காவல் துறை ஆய்வாளார் பால்ராஜ் கூறுகையில்...............................................................................................................................................

தினச்செய்தி
காதலித்து கைபிடித்த கணவனின் காலை கல்லை தூக்கிபோட்டு உடைத்த மனைவி
சென்னை டிசம்பர்,27,2039 : சென்னை வளசரவாக்கம் கோதை நகரில் வசித்து வருபவர் தமிழ்செல்வி, வயது 35. இவரது கணவர் கோவிந்தன், வயது 38. இவர்களுக்கு ஆனந்த் (5), ஆனந்தி(3) என்று இரு குழந்தைகள் உண்டு கோவிந்தன் சென்னையில் உள்ள தனியார் எக்ஸ்போர்ட் கம்பெனியில் சூப்ரவைசராக வேலை செய்கிறார். அதே கம்பெனியில் தினசரி கூலிவேலை பார்த்து வந்தார் தமிழ்செல்வி. வேலை செய்யும் இடத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்து கடந்த 2029 ஆண்டு திருமணத்தில் முடிந்தது. இந்நிலையில் குடிக்கு அடிமையான கோவிந்தன் சம்பவம் நடந்த திங்கட்கிழமை இரவு குடித்துவிட்டு தமிழ்செல்வியை தகாத வார்த்தைகளால் திட்டி இருக்கிறார். கடந்த ஆறு மாதமாகவே தமிழ்செல்வியின் நடத்தையில் சந்தேகம் கொண்டும் இருந்திருக்கிறார் கோவிந்தன். நேற்று போதையில் மிக மூர்க்கமாக நடந்துகொண்ட கோவிந்தனின் காலில் அம்மிக்கல்லை போட்டு காலை உடைத்தார் தமிழ்செல்வி. உடனே அருகில் குடி இருந்தவர்கள் ஓடி வந்து கோவிந்தனை பக்கத்தில் இருக்கும் மருத்துவமனையில்............

தீப்பொறி
காதலிக்க மறுத்த பெண்ணின் மீது ஆசிட் வீச்சு
சென்னை டிசம்பர் 27, 2025: சென்னை புதுப்பேட்டை வேளாங்கண்ணி தெருவில் வசித்து வருபவர் நாராயணன், வயது 44. தச்சு தொழில் செய்து வந்தார். இவருக்கு அலமேலு(42) என்கிற மனைவியும், பூங்கோதை(22), தமிழ்செல்வி(21), கனகவல்லி(18) என மூன்று மகள்களும் உள்ளனர். இதில் தமிழ்செல்வி வயது , பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு சென்னையில் உள்ள எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சம்பவம் நடந்த வெள்ளிகிழமை அன்று வழக்கம் போல வேலைக்கு செல்ல பேருந்து நிலையத்தில் நின்றிருக்கிறார் தமிழ்செல்வி. அப்பொழுது அவரை ஒரு தலையாக காதலித்த ரவிகுமார்(24) என்பவர் முட்டையில் ஆசிட் வைத்து தமிழ்செல்வி மீது வீசி இருக்கிறார். தமிழ்செல்வி சுதாரித்ததால் அது அவரது தோள்ப்பட்டையில் விழுந்திருக்கிறது. பேருந்து நிறுத்தத்தில் நின்ற உடன் வேலை செய்பவர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.கைது செய்யப்பட்ட ரவிக்குமார் தான் கடந்த இரண்டு வருங்களாக தமிழ்செல்வியை காதலித்து.............

தினக்குயில்
மாணவியிடம் ஆசிரியர் அத்துமீறல்
சென்னை டிசம்பர் 28, 2016: சென்னை ராயபுரம் தண்டு மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் நாராயணன். இவரது மகள் தமிழ்செல்வி வயது . இவர் அருகில் உள்ள அறிஞர் அண்ணா பெண்கள் மேல்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவரது வகுப்பு ஆசிரியர் அன்பழகன் வயது . கடந்த ஆறு மாதமாகவே தமிழ்செல்வியிடம் தாகத வார்த்தைகள் பேசியுள்ளார் அன்பழகன். சம்பவம் நடந்த திங்கள் அன்று அன்பழகன் தமிழ்செல்வியை பள்ளி முடிந்தவுடன் வந்து பார்க்குமாறு சொல்லி இருக்கிறார். அன்பழகனை பார்க்க சென்ற தமில்செல்வியிடம் தாகத வார்த்தைகளை கூறி உள்ளார் அன்பழகன். மேலும் அவரது வீட்டுக்கு வருமாறு வற்புறுத்தி இருக்கிறார்......................................................................................................

தினமகள்
சுனாமியில் தப்பித்த தெய்வ குழந்தை
சென்னை டிசம்பர் 28, 2004: சென்னை அமைதிக்குப்பம் எம்.ஜி.ஆர் தெருவில் வசித்து வருபவர் நாராயணன் வயது . இவரது மனைவி அலமேலு வயது. இவர்களுக்கு பூங்கோதை என்ற ஒரு வயது மகள் உண்டு. சென்னையை சீரழித்த சுனாமி வந்த ஞாயிறு அன்று பிரசவத்திற்காக அருகில் இருந்த மகப்பேறு நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் அலமேலு. அன்று காலை தாகிய பிரமாண்ட ஆழிபேரலையில் அந்த மகப்பேறு நிலையம் முற்றிலும் சேதமாகியது. இருந்தாலும் கடவுளின் கிருபையால் அலமேலுவுக்கும் அவருக்கு அப்பொழுதே பிறந்த குழந்தைக்கும் சிறு பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த நம்பமுடியாத அதிசியத்தை பற்றி கணவர் நாராயணன் கூறுகையில்........................

நீதி : அதெல்லாம் பெரிசா ஒண்ணுமில்லை, இந்த பாரத தேசத்தில் பெண்கள் ஒருமுறை தான் பிறக்கிறார்கள்; ஆனால் தினம் தினம் இறக்கிறார்கள், அவ்வளவு தான்.!

Thursday, December 8, 2011

நீ, நான், அவன்.!

டாஸ்மாக்கில் சைட் டிஷ் கொண்டுவர லேட்டானதால் கொட்டு வாங்கும் சட்டை பட்டனில்லா சிறுவன், கார் கண்ணாடியின் தூசிகளை தட்டிவிட்டு ஓம் படம் வரைந்து தலையை சொறியும் அழுக்கு சட்டைக்காரன், தூணிலும் துரும்பிலும் இருக்கும் கடவுளை முச்சந்திக்கு இழுத்து வரும் சாலை படம் வரைபவன், களைப்புக்கு தூங்கப்போறானோ , கொழுப்பு கரைக்க புணரப்போறானோ என்ற கேள்விகளை துறந்துவிட்டு தோள்கள் வலிக்க கட்டில் இழைக்கும் ஆசாரி, காற்று அமுங்கிப்போன சக்கரம் கொண்ட தள்ளுவண்டியை தள்ளிப்போகும் சோன்பப்டிக்காரன், சாமிகளை கண்ணாடி பிரேமிற்குள் அடைத்து விற்பவன், ரூ. 8 கடன்பாக்கியை மறக்காமல் தர வேண்டிக்கொள்ளும் கையேந்திபவன் ஓனர், ஐஸ் வேணுமா? வேணாமா? என அக்கறையுடன் கேட்டுக்கொண்டே ஈ ஓட்டும் கரும்பு ஜூஸ் கடைக்காரர், சூடா என்ன இருக்கு? என்ற கேள்வியை லட்சத்திநூறாவது தடவை கேட்டுவிட்டு டேபிள் துடைத்துக்கொண்டே கடகடவென ஒப்பிக்கும் இளைஞன், கோக்கையும் பெப்சியையும் சொன்ன விலைக்கு வாங்கிக்குடிப்பவர்களிடம் 2 ரூபாய்க்கு பேரம் பேசிக்கொண்டிருக்கும் இளநி விற்பவர், பழைய லாரி தில் 'இங்கு பஞ்சர் ஒட்டப்படும்' என எழுதி காத்திருக்கும் ஹை-வே பட்டறைக்காரன், பீடி வலித்துக்கொண்டே குப்பையை அள்ளி நகராட்சி வண்டியில் போடும் துப்புரவாளர், இந்தியாவில் விற்கப்படும் அத்தனை பவுடர்களையும் வியர்வை கலந்து சுவாசிக்கும் பேருந்து நடத்துனர், தினமும் குறைந்தது பத்து பேரிடமாவது திட்டு வாங்கியும் நேரத்திற்கு செல்ல ஹாரன் அடிக்கும் ஓட்டுனர், 'அடுத்து வரும் பாடலை பாடுபவர்கள் உங்கள் எஸ்.பி.பி மற்றும் சின்ன குயில் சித்ரா' எனும் ரேடியோவை கேட்டபடி மெஷின் மிதிக்கும் தையற்காரர், எப்பொழுதும் தலைகனமாய் திரியும் சித்தாள், காதை ரூல் பென்சில் ஸ்டான்டாய் கொண்டிருக்கும் கொத்தனார், ஆந்தையோடு குடித்தனம் நடத்தும் தமிழ் மற்றும் திபெத்திய கூர்க்கா, ஆசுவாசப்படுத்திக்கொள்ள டீயை உறிஞ்சி குடிக்கும் குடும்ப சுமைகளை குறைக்க மூட்டை தூக்கும் மீசைக்காரர், குருவாயூரப்பனையும் மோகன்லாலையும் மறந்துவிட்டு நோயாளிகளுடன் வாழும் மலையாள நர்ஸ், தன்னைவிட முப்பது வருடம் இளையவனுக்கு ஹார்லிக்ஸ் வாங்கிவரும் காக்கிசட்டை பியூன், ஆட்டுக்குட்டிக்கு பஸ் டிக்கெட் எடுக்கணுமா என்ற கவலையுடன் பஸ் ஏறும் விவசாயி, விசேஷத்திற்கு போட்டுக்கொண்டு போகும் சட்டையை தலையணைக்கு அடியில் இஸ்திரி போடும் கைத்தறி நெசவாளி, துணி துவைக்கும் சோப்பிலேயே முகம் கழுவி சாப்பிட தயாராகும் மெக்கானிக், இதுவரை ஆயிரக்கணக்கான ஜாதகங்களை பிரதி எடுத்து கொடுத்துவிட்ட ஜெராக்ஸ் கடை முதிர்கன்னி, எக்ஸ்போர்ட் துணி பிசிறுகளை எட்டு மணி நேரம் நின்றுக்கொண்டே வெட்டிப்போடும் தினக்கூலிகள், இயற்கை தந்த மூன்று நாள் லீவில் மூன்றாம் நாளை விரும்பி கேன்சல் செய்துவிட்டு பவுடர் பூசும் விலைமாது, நாய் பொம்மை விற்க நாயை விட அதிகம் குலைக்கும் பொம்மை விற்பவன், மாதம் ஒரு நாள் சம்பள கவர் வாங்க தினமும் ஆயிரம் கவர்களை டெலிவரி செய்யும் கொரியர் இளைஞன், மற்றவர்கள் காலில் கற்பழிக்கும் செருப்பை கையால் தடவி வேலை செய்யும் வெத்தலை வாய்க்கார செருப்பு தைப்பவன், கஞ்சனையும் கடவுளாக்கும் குருட்டு பிச்சைக்காரன், மீன் பிடிக்க போய் கருவாடாய் திரும்பி வரும் மீனவன், சோப்புகளை தூக்கிக்கொண்டு வீதி வீதியை அலையும் விற்பனை பிரதிநிதி, களைப்பு தெரியாமல் இருக்க கட்டிங் போட்டுவிட்டு கண்களால் கற்பழிப்பவனுக்கு ஆடிக்காட்டும் கரக்காட்டக்காரி, பத்து ரூபாய்க்கு பாயாய் குனியும் பூசாரி, ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து பாணி பூரி விற்கும் உ.பி'காரன், பத்து ரூபாய்க்கு சகல பிரியாணியும் போடும் நடமாடும் டிபன் வண்டிக்காரன், எல்லா அப்பார்ட்மென்ட்வாசிகளையும் தெரிந்து வைத்திருந்தும் இதுவரி யார் வீட்டுக்குள்ளும் நுழைய அனுமதி கிடைக்காத வாட்ச்மேன், டீ மாஸ்டர், பலகார மாஸ்டர், புரோட்டா மாஸ்டர், இந்த சமுதாயத்தை எப்படி நடத்த வேண்டுமென செய்துகாட்டும் பேப்பர் போடும் பையன், பிணத்தையும் சிரிக்க வைத்து போட்டோ எடுக்க கஷ்டப்படும் போட்டோகிராபர், கந்துவட்டிக்காரனுக்கு பாதி பணத்தை சம்பாதித்து கொடுக்கும் மார்கெட் காய்கறி கடைக்காரர்கள், வாழ்கையை வறுமையிலும் வண்ணமயமாய் வாழும் கோல பொடி விற்பவர், நைந்த கைலியுடன் பாய் விற்பவன், முட்டை இலந்தை நவாப்பழம் வெள்ளரி என சீசனுக்கு ஒன்று விற்று போகும் கூடைக்காரிகள், பாத்திரம் தேய்ப்பதற்கு சம்பளம் வாங்கி வீட்டு ஓனர் உடம்பை தேய்த்து போவதை சகித்துக்கொள்ளும் வேலைக்கார பெண்கள், இட்லி விற்கும் ரிட்டயர்ட் ஆகாத ஆயாக்கள், வாரம் நான்குநாள் லீவு விட்டுவிடும் குடிக்கார ஆட்டுக்கால் சூப் கடைக்காரர், ஜில் ஜில் ஜிகர்தண்டா விற்கும் சிடுமூஞ்சிக்காரர் என இந்த தேசத்தில் தான் எத்தனை கோடி மனிதர்கள்? எத்தனை கோடி கனவுகள்? எத்தனை கோடி தொழில்கள்? ஆனால் ஒரே ஒரு முதலாளி......................................................
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அவன் பெயர் 'பசி'...!!!!!
.
.
.
.

................................................................................................................................................................
( "இந்த உலகத்தில் கை இல்லாதவன் உண்டு, கால் இல்லாதவன் உண்டு, வயிறு இல்லாதவன் இல்லை" என்று எங்கோ படித்த கவிதை ஒன்றின் உந்துதலில் எழுதியது )