Friday, July 6, 2012

சும்மா.!!!

உங்க பையன் என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்? இப்போதைக்கு ____________ தான் இருக்கான்.!
நீங்க அழகா இருக்கீங்க.! _________ சொல்றீங்களா? இல்லை உண்மையாவா ?
அட இல்லீங்க, நான் _________ கிண்டல் பண்ணினேன்.
ஏண்டா மச்சான் கிரிக்கெட் விளையாட வரல, பிசியா? இல்ல மச்சான் _________ தான்.
ஏன்யா என் மச்சினியவே பார்க்குற? _________ பார்த்தேன்'ப்பா.!
ஆபிஸ் எப்போங்க முடிஞ்சது? ஏன் கேட்குற? இல்ல _______________
என்னய்யா புதுசா இந்த பக்கம், ஏதாவது முக்கியமான செய்தியா? _______ கூட வரக்கூடாதா?
_________ திட்டுனேன் சார், கோவிச்சுக்கிட்டு இப்படி பண்ணிட்டான்.
சட்டை சூப்பர் , மாமியார் வீட்டுல வாங்கி தந்ததா? ___________ தருவாங்கடா.!
வேணாம், ________ இரு, அப்புறம் உனக்குத்தான் கஷ்டம்.!
கொஞ்ச நேரம் ___________ இருடா, ஒரு மண்ணாங்கட்டியும் புரில.!

மேலே இருக்கும் எந்த வாக்கியதுக்காவது சரியா அர்த்தம் விளங்குதா நட்பூஸ்? இருக்காது. ஏன்னா, தமிழில் சும்மா'ங்கிற வார்த்தை மட்டும் நாம சும்மா சும்மா பயன்படுத்தலேனா, சுத்தமா நாம பேசுறது நமக்கே புரியாது. சும்மா சொல்லல, சீரியஸா சொல்றேன். தமிழ் வாழ்க. தமிழ் வளர்க.

லீவ் லெட்டர்

குங்குமம் வாசகர்களுக்காக மிக மிக சிரமப்பட்டு, பிரபலங்கள் ஸ்கூலில் படிக்கும்போது எழுதிய லீவ் லெட்டர்களை ( லீவ், லவ் அல்ல ) கண்டுபிடித்து பிரசுகத்திருக்கிறோம். இனி உங்க பாடு.

கவுண்டமணி, ஐந்தாம் வகுப்பு, குண்டலகேசி ஆரம்பப்பள்ளி:
டேய் டமரடக்க வாய, நீயெல்லாம் வாத்தியாராடா? ஏய் கொய்யாக்கா தலையா, ஏய் கோமுட்டி தலையா, உன் மூஞ்சி எனக்கு புடிக்கலடா, என்னால ஸ்கூலுக்கு வர முடியாது போடா. ஐயோ ஆண்டவா, என்ன ஏன் இதுமாதிரி பிசினாறி பள்ளிக்கூடத்துல சேர்த்து விட்ட. ஐயோ ராமா.!

மாணிக்கம் என்கிற நாமு ( ராமு ), ஏழாம் வகுப்பு, அண்ணா உயர்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம் :
ஐயோ தீத்சர், அம்மா மேல ஆணையா சொல்தேன், எனக்கு ரெண்து நாளா மூத்து வலி தீத்சர். ஐயோ, காலெல்லாம் கிதுகிதுன்னு ஆதுது தீத்சர். கண்ணெல்லாம் இருளுது தீத்சர். பள்ளிகூததுக்கு இன்னைக்கு வர முதியாது தீத்சர். என்னை மன்னிச்சிருங்க தீத்சர் என்னை மன்னிசிதுங்க.

வீராசாமி, ஐந்தாம் வகுப்பு, உயர்நிலை பள்ளி வண்டலூர்:
வாத்தியாரம்மா வணக்கம், எனக்கு ரெண்டு நாளா சுணக்கம், வேர் இஸ் யுவர் டாட்டரு? அதான் மேட்டரு.! உங்க டாட்டர பார்க்காம எனக்கு நோவு, அதான் இன்னைக்கு லீவு, ஏய் டண்டணக்கா, ஏய் டனக்குனக்கா.!

போக்கிரி, இரண்டாம் வகுப்பு, திருப்பாச்சி நடுநிலை பள்ளி, சிவகாசி
ண்ணா, வணக்கங்கண்ணா, நான் போக்கிரி எழுதறேங்கன்னா, நேத்து மதுரை முத்துபாண்டி கிரவுண்டுல கபடி மேட்ச்ங்கண்ணா, சும்மா கில்லி கில்லி கில்லி மாதிரி ஆடுறப்போ, கீழ சில்லற வாரி கால் உடைஞ்சு போச்சுங்கண்ணா. ண்ணா, யாரு பள்ளிகூடத்துக்கு மொதல வரோங்கிறது முக்கியமில்லண்ணா, யாரு வூட்டுக்கு போறன்கிறது தான் முக்கியம்ண்ணா.

கட்டபொம்மன் (எ) கர்ணன், எட்டாம் வகுப்பு, இயல் இசை பள்ளி, சென்னை
டீச்சர்ர்ர் டீச்சர்ர்ர்ர் டீச்சர்ர்ர்ர், லதா டீச்சர்ர்ர், எனக்கும் மட்டும் ஆண்டவன் பறக்கும் சக்தியை கொடுத்திருந்தால் டீச்சர்ர்ர், நான் நேரா பறந்து வந்து லீவு கேட்டிருப்பேன் டீச்சர். உங்கம்மா நேத்து சூப்பர் மார்கெட்ல தடுக்கி விழுந்தப்போ என் ரெண்டு கையால தாங்கி பிடிச்சேன் டீச்சர். இப்போ என் கை ஒடஞ்சு கை வீசம்மா கை வீசு, கை வீசம்மா கை வீசுன்னு உள்ளுக்குள்ள அழுவறேன் டீச்சர். இடி தாங்கும் கைகள், அடி தாங்குமா......

கைப்புள்ள, ஆறாம் வகுப்பு, நாய் சேகர் நினைவு துவக்கப்பள்ளி, கட்டதுரைபுரம்.
ஹலோ, நான் வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவர் கைப்புள்ள எழுதறேன், எங்க வாத்தியார் ஜாக் இருக்காரா? ஏய், ஏய் மிஸ்டர், இது லவ் லெட்டர் இல்ல, லீவ் லெட்டர். நேத்து பத்து பாஞ்சு பேரு, கல்லுக்கல்டை மூத்திர சந்துல வச்சு என்ன நொங்கி நோம்பி கும்பிட்டுட்டாங்க. நான் அதுக்கு சரி பட்டு வரமட்டேனாம். அதனால, அதனால, ஐ ஆம் சிங் இன் தா ரெயின், ஐ ஆம் சொய்ங் இன் தா ரெயின்.

கேப்டன், பத்தாம் வகுப்பு, B செக்சன், காவலர் குடியிருப்பு உயர்நிலை பள்ளி, செங்கோட்டை
ஏய் புள்ள டீச்சரு, தமிழ்நாட்டுல இருக்கிறது மொத்தம் 21698 பள்ளிக்கூடம். அதுல ஆரம்பள்ளி 14356, நடுநிலைபள்ளி 4415, உயர்நிலைபள்ளி 2927. மொத்தமா படிக்கிற குழந்தைங்க 674857. அதுல ஆம்பள குழந்தைங்க 389748 பொம்பள குழந்தைங்க 285109. இதுல நான் ஒருத்தன் வராட்டி ஒரு தப்பும் இல்ல, மொதல அவங்களுக்கு புரியுற மாதிரி பாடம் எடுங்கவரட்டா, ஆங்.!

Laughing club

இந்தியாவின் பொருளாதார தலைநகரமும், குற்றங்களின் தலைநகரமுமான மும்பையில், மும்பை காவல்துறை சரித்திர முக்கயத்துவம் வாய்ந்த ஒரு செயலை சென்றவாரம் செய்திருக்கிறது. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்; கொஞ்சம் பழசா இருக்குல, இப்படி வச்சுக்குவோம், பல்லு தெரிய சிரித்தால் உடல் தொல்ல விட்டு போகும் என்பதற்காக ஊருக்கு ஊருக்கு சிரிப்பு சங்கங்களை ஆரம்பித்தால், மும்பை மாநகர போலீஸ், மும்பை Laughing club'ஐ தடை செய்திருக்கிறது. காரணம், அவர்கள் பூங்கா, நண்பர்கள் வீடு போன்ற இடங்களில் சப்தமாக சிரிக்கறாங்களாம். ஆக நாட்டுல நம்ம பொழப்பு சிரிப்பா சிரிச்சாலும், நாம சிரிக்க கூட சுதந்திரமில்லை. பதருகளா, விலங்குகிட்ட இருந்த நம்மள கொஞ்சமாவது பிரித்து காமிப்பதே சிரிப்பு தான்யா. என்னய்யா நடக்குது இந்த தேசத்தில், நாடு ரோட்டுல எச்சில் துப்புறவன், உச்சா போறவனையெல்லாம் விட்டுடுறாங்க, சிரிக்கறவங்கள புடிக்கிறாங்க. தடியெடுத்தவன் எல்லாம் தாணாக்காரன் ஆனாலும், தாணாக்காரன் தடி எடுத்தாலும் நஷ்டம் நமக்குதான்.! இப்படியே போனால் இவிங்க, அடுத்து கொட்டாவி விடுறவன், தும்முறவன், விக்குறவன், இருமறவன் கன்னத்தில் எல்லாம் கைரேகையை பன்ச் பண்ணிடுவாங்க போலிருக்கு. அப்படியே அடுத்து ஒவ்வொரு காலேஜா போனீங்கன்னா, இந்த சைட்டடிப்பது, கடலை போடுவது, மொக்கை போடுவதுக்கெல்லாம் தடா, பொடா போட்டு கெடா வெட்டி விட்டுடுங்க. அதை முடிச்சுட்டு அப்படியே ஒவ்வொரு வீடா போனீங்கன்னா நகம் வெட்டுறது, மூஞ்சி கழுவறது, குளிக்கறது, கக்கா போறதுக்கெல்லாம் ஒரு தடைய போட்டுடுங்க. அப்படியே டைவர்ஷன் எடுத்து டாஸ்மாக் பக்கம் போனா, ஏப்பம் விடுறது, வாந்தி எடுக்கறது, மாட்டையாவது போன்ற குடிமகன்களின் உரிமைகளிலும் கல்ல தூக்கி போட்டுடலாம். அப்புறம் மிச்சமிருக்கிறது மூக்கு நோண்டுவது, தலை சொறிவது, சளி சிந்துவது போன்ற அன்றாட கடமைகளையும் தடுத்துட்டா, மொத்த சோலியும் முடிச்சுடலாம். உலகின் பெரிய ஜனநாயகமான இந்திய தேசத்தில், இப்படியாய்யா சிரிக்கும் உரிமைகளை கூட பறிப்பீங்க? இருங்கய்யா, உங்களையெல்லாம் நடிகர் பிரபுவோட கால்ஷீட் வாங்கி வந்து புரட்சி பண்ண வைக்கறேன்.

ரூ.28.65/

சென்ற வாரம் பல பொருளாதார மேதைகள் கவனிக்க தவறிய ஒரு செய்தி உண்டு. உலகில் மொத்தமே வாழும் 110000 பார்சிக்களுக்கான 'பாம்பே பார்சிகள் பஞ்சாயத்' எனும் அமைப்பு மாதம் ரூ.90000 'க்கு கீழ் சம்பாதிக்கும் பார்சிகள் ஏழை என அறிவித்து இருக்கிறது. அப்படி வாழும் ஏழை(?) பார்சி மக்களுக்கு வீடு ஒதுக்கி உதவியும் செய்யப்படும் என அறிவித்தும் இருக்கிறது. நமது இந்தியாவின் திட்டக்குழு துணைத்தலைவர் அலுவாலியாவோ தினம் ரூ.28.65/- க்கு மேல் சம்பாதிக்கும் நகர்புற இந்தியர்களும், ரூ.22.42/- மேல் சம்பாதிக்கும் கிராமப்புற இந்தியர்களும் வறுமைக்கோட்டுக்கு மேல் வாழும் பணக்காரர்கள் என அறிவித்து இருக்கிறது. ஆக, வறுமை கோடு என்பது தொப்பையின் மடிப்பிலும் இருக்கலாம், பசியால் வயிறு சிறுத்தவனின் சுருக்கங்களிலும் இருக்கலாம். இப்போ தினம் ரூ.28.65/- க்கு மேல் சம்பாதிக்கும் பணக்காரர்களை எப்படி கண்டறிவது, அவர்களிடம் இருக்கும் 'அளவுக்கு' அதிகமான பணத்தை என்ன செய்வது என்று பார்க்கலாம்.

மாதா, பிதா, குரு, பெட்ரோல், டீசல், தங்கம் என்றாகிவிட்ட சூழ்நிலையில் 400 மில்லிக்கு மேல் பெட்ரோல் போடும் மர்ம நபர்களின் வீடுகளில் வருமானவரி துறையினரை விட்டு சோதனை செய்யலாம்.

துணி துவைக்கவும், தேய்த்து குளிக்கவும் இரு வேறு சோப்புகளை பயன்படுத்துபவர்களை தேச துரோக வழக்கில் பிடித்து சிறையில் அடைக்கலாம்.

ஹோட்டல்களில் 15 ரூபாய் மதிப்புள்ள ரெண்டு தோசை சாப்பிடும் உல்லாச மனிதர்களை வருமானத்திற்கு அதிகமா சொத்து சேர்த்த வழக்கில் கைது செய்யலாம்.

வருடம் ஒரு குவாட்டருக்கு மேல் குடிக்கும் குடிமகன்களை, அவர்களின் கருப்பு பணம் எங்குள்ளதென டார்ச்சர் செய்யலாம்.

பொண்டாட்டிக்கு 50 கிராமுக்கு மேல் அல்வா வாங்கி போகும் கணவர்களை ஹவாலாவில் கைது செய்து திவாலாக்கலாம்.

செல்போனில் இருந்து தினம் பத்து மேற்பட்ட அழைப்புகளும், மெசேஜ்களும் அனுப்பும் பணக்காரர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்யலாம்.

ஒரு டீ 6 ரூபாய், ஒரு வடை 6 ரூபாய் - ஆக தினம் ஒன்றுக்கு மேற்பட்ட டீ வடை சாப்பிடும் நபர்களை ஸ்பாட்லியே பிடித்து luxury tax போடலாம்.

கோவில் வாசல், சிக்னல் பிச்சைக்காரர்களிடம் தினம் வரும் வருமானத்தை கணக்கீடு போடலாம், ரூ.28.65/- க்கு மேல் வருமானம் இருந்தால் கூடுதல் வரி விதிக்கலாம்.

தினம் ஒரு வேளைக்கு மேல் சாப்பிடும் ஆட்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யலாம்.

காதலிகளுக்கு கர்ச்சீப், கைக்குட்டை தவிர வேறு பரிசு தர முயற்சிப்பவர்களை கைது செய்து, வெளிநாட்டில் இருந்த பணம் வந்ததா என கண்டறியலாம்.

லிட்டர் 36/- ரூபாய்க்கு விற்கும் பாலை, தினம் இரண்டு இருமல் மருந்து பாட்டில் மூடிக்கு மேல் குடிப்பவர்களை நாடு கடத்தலாம்.

10/- ரூ. கொடுத்து சட்டை, பேன்ட் அயர்ன் பண்ணி போட்டு வருபவர்கள் அன்று முழுக்க வேறு ஏதாவது செலவு செய்கிறார்களா என சி.பி.ஐ விட்டு கண்காணிக்க செய்யலாம்.

வருடம் ஒரு பனியன் ஒரு ஜட்டிக்கு மேல் பயன்படுத்துபவர்களை கண்டறிந்து தேவையற்ற பனியன் ஜட்டிகளை பறிமுதல் செய்யலாம்.

இதை விட முக்கியமானது, அளவுக்கு அதிகமாக வாக்காளர்கள் கவனிக்கப்படும் இடைதேர்தல்களை தேர்தல் ஆணையமே புறக்கணித்து பண புழக்கத்தை தடுக்கலாம்.