ரயில் ஹாரன், பஸ் ஹாரன், ஏரோப்ளேன் சத்தம், நிலத்தடி போர் போடும் வண்டி, இவை எல்லாத்தையும் விட டார்ச்சரான சவுண்ட் தருவது எது தெரியுமா மக்களே, அது சைனா மேக் செல்போனின் ரிங்டோன் தான்.
போனவாரம் ஓகே ஓகே படம் பாத்துகிட்டு இருந்தேன், நண்பர் உதயநிதி கஷ்டப்பட்டு ஹன்சிகாவ கரக்ட் பண்றப்போ, திடீரென 'புலி உறுமுது, இடி இடிக்குது' ' புலி உறுமுது, இடி இடிக்குது ' என நாலஞ்சு தடவை தியேட்டரில் 8.4ரிக்டேர் அளவு அதிர்வு வர மாதிரி ஒரு சத்தம், பக்கத்துல உட்கார்ந்து இருக்கிற பிகர்களுக்கு பாதுகாப்பு தர அவங்க இறுக்கி அணைச்சுக்கிட்டு எட்டி பார்த்தா, மொத ரோல, ஒரு டிப்பர் லாரி வாயன் கொரியன் மொபைல ரிங்டோனா அந்த பாட்டா வச்சிருக்கான்.
ரிங்டனோட மோசம், காலர்டோன். ஒரு குழாப்புட்டு மண்டையன் காலர்டோனா 'ஹா ஹ ஹா, போடா ஆண்டவனே என் பக்கம் இருக்கான்'னு பாட்சா பட டயலாக்க வச்சிருக்கான். ஏன்டா, இப்போ எங்ககூட மட்டும் என்ன அமிதாப்பச்சான இருக்காரு?
இந்த வருஷம் ஆடி மாசம் அம்மனுக்கு கூழ் ஊத்தறப்போ, எங்க தெருவுல குழாய் மைக்செட்டுக்கு பதிலா, இந்த சைனா மொபைலில் நாலஞ்சு எல்.ஆர்.ஈஸ்வரி பாட்ட போட்டு செலவ மிச்சம் பண்ணலாம்னு இருக்காங்க எங்க ஏரியா 'கதவை திற காத்து வரட்டும்' நற்பணி இயக்கத்தினர். சத்தம் எப்படி பார்த்தாலும் மூணு தெரு வரை Mute ஆகாம கேட்கும்.
செல்போனும் பண்டைய தமிழர் நாகரீகமும் என்று வருங்காலத்துல ஒரு புத்தகமே வந்தாலும் வரலாம், அந்தளவு செல்போனுல பேச பல வகையான பண்பாட்டை உருவாக்கி இருக்காங்க நம்ம மக்கள். அதுல கொஞ்சத்த இப்போ பார்ப்போம் மக்களே.
ரிலேடிவிட்டி தியரிய கூட புரிஞ்சுக்கலாம் நண்பா, ஆனா இதுவரை மொபைலில் அழைப்பு வந்தால், ஆம்பளைங்க வெளியே போய் ஏன் பேசறாங்க, பொம்பளைங்க ரூம்குள்ள போய் ஏன் பேசறாங்கன்னு இதுவரைக்கும் புரியல. ஒருவேளை, ஆண்களுக்கு அது (வெளியே௦)செல்'போன், பெண்களுக்கு அது (உள்ளே)செல்'போனோ?
'திருமலை' விஜய் மட்டுமல்ல, வாழ்க்கை ஒரு வட்டம்னு செல்போன் கூட நிரூபிக்குது. கல்யாணத்துக்கு முன்னால ஒரு ஆண் ஆர்வக்கோளாறுல ஒரு பொண்ணுக்கு அதிகம் அனுப்புற எஸ்.எம்.எஸ் "Where are you ? waiting ". கல்யாணத்துக்கு அப்புறம் அதே எஸ்.எம்.எஸ் தான், ஆனா இப்போ அதை பொண்ணுங்க அனுப்புவாங்க.
சின்ன வயசுல, ரேடியோவ முழுங்குன மாதிரி, சில பேரு செல்போன்ல அந்த கத்து கத்துறாங்க. ஏன்டா டேய், செல்ல ஆப்பண்ணிட்டு நீங்க பேசினாக்கூட எதிர்முனையில இருக்கிறவனுக்கு கேட்கும்டா, ஏன்டா எங்க காதுக்குள்ள வந்து கம்பிய காய்ச்சி உடுறீங்க. இந்த பொண்ணுங்க போன் பேசறது எவனுக்காவது கேட்டு இருக்காடா நூடுல்ஸ் தலையனுகளா. பொண்ணு பேசறது அந்த செல்லுக்கே கேட்காது.
வள்ளுவர் இன்னைக்கு இருந்திருந்தால் 'மிஸ்டு கால் கொடுத்து வாழ்வாரே வாழ்வார், மற்றவரெல்லாம் கால் பண்ணி காசு அழித்தே சாவார்'ன்னு குறள் எழுதியிருப்பாரு. பயபுள்ளைங்க செல் வாங்கி மொதல கத்துக்கிறதே மிஸ்டு கால் கொடுக்கத்தான். இருங்கடா இட்லி குக்கர் தலையனுங்களா, அடுத்த பட்ஜெட்ல மன்மோகன்சிங்கிட்ட சொல்லி, ஒரு ரிங் விட்டு கட் பண்ணினா ஒரு ரூவா பைன் போட சொல்றேன்.
ஒரு நோட்டிஸ ஐநூறு பிரதி எடுத்து ஆயிரம் பேருக்கு கொடுத்தா அங்காளபரமேஸ்வரி அருள்பாலிப்பான்னு சொல்லிக்கிட்டு திரிஞ்ச அதே கும்தலக்கா கொய்யாப்பழ குரூப்புதான், இன்னைக்கு தொழிநுட்ப புரட்சியால் ஒரு எஸ்.எம்.எஸ்ஸை அம்பது பேருக்கு அனுப்பினால் ஆஞ்சநேயர் அருள் தருவாருன்னு கிளப்பிகிட்டு திரியறானுங்க. உலகின் மோசமான தீவிரவாதிகள் அல்-உம்மாவில் எல்லாம் இல்லை, அவனுங்க நம்மகூடவே தான் இருக்காங்க, இலவச எஸ்.எம்.எஸ் ஆக்டிவேட் பண்ணின எல்லோரும் தான் அவனுங்க தான். காலையில் ஒரு குட் மார்னிங், மதியம் ஒரு குட் ஆப்ட்டர்நூன், சாயந்திரம் குட் ஈவ்னிங்னு நாள் முழுக்க ரன்னிங் கமெண்ட்ரி தருவானுங்க.
போன ஜென்மத்தில் பெரும் பாவம் பண்ணியவர்கள் பெண்களின் செல்போனில் கீ-பேடாய் பிறக்கிறார்கள்; என்னா அமுத்துடா டேய். ஒலி. ஒளியை விட வேகமாகமானது பொண்ணுங்க மெசேஜ் டைப் பண்ற வேகம். மெசேஜ் டைப்புவது மட்டும் ஒலிம்பிக்கில் இருந்தால், நிச்சயம் இந்திய பெண்கள் நாலஞ்சு தங்கப்பதக்கம் வாங்குவது நிச்சயம்.
ஒழுங்கா ஜட்டி போடுறாங்களோ இல்லையோ, பல பேரு செல்போனுக்கு ஸ்வெட்டர் போட்டு வச்சிருக்காங்க. ஜட்டியவாவது வாரம் ஒரு முறை மாத்துவாங்க, இந்த கவர் பாழடைஞ்சு சென்னை சூப்பர் கிங்க்ஸ் யூனிபார்ம் மஞ்சளா போனாலும் மாத்த மாட்டாங்க. இன்னமும் சில பேரு இருக்காங்க, செல்போனுக்கு வாக்கபட்டவங்க, கழுத்துல செல்போன தாலி மாதிரி தொங்க விட்டுட்டு அலையுவாங்க. அது என்ன போலீஸ் ஸ்டேஷன், ரயில்வே ஸ்டேஷன்ல சங்கிலி போட்டு கட்டியிருக்குற எவர்சில்வர் தம்ளாரா?
கேர்ள் பிரண்ட கடன் கேட்டாகூட ரெண்டு நாளைக்கு கொடுப்பானுங்க போல, ஆனா செல்போன பாத்துட்டு தரேன்னு சொன்னா போதும், ரெண்டு நிமிஷம் நோண்டிட்டு, எதையாவது அழிச்சுட்டு அப்புறம் தான் தருவாங்க. இருங்கடா நீங்க எல்லாம், ஒசாமாவோட ஒண்ணுவிட்ட பங்காளிங்கன்னு ஒபாமாகிட்ட போட்டு விடுறேன்.
ரோட்டுல நாலு பேர பாத்தா, அதுல மூணு பேரு பெவிகால் போட்டு ஒட்டுன மாதிரி தலையை தோள்பட்டை மேல சாய்ச்சு வச்சிட்டு போறான். என்னடா இது புது வகையான எலும்புருக்கி நோயான்னு பார்த்தா, வண்டி ஓட்டிக்கிட்டே செல்போன்ல பேசிக்கிட்டு போறானுங்க. அட பாவிங்க, வண்டி ஓட்டுறப்ப ரொம்ப பிடிச்ச woman 'னே கூப்பிட்டாலும் எடுக்காதீங்க, அவங்களே உனக்கு எமனாகிடுவாங்க.!
செல்போன்ல இருந்து ரெண்டு வொயர காதுல மாட்டிகிட்டு சில பேரு நாட்டுல சுத்திக்கிட்டு இருப்பாங்க. திடீரென பார்க்கிறப்போ, எதோ காது கேட்காம, மெஷின யூஸ் பண்ற மாதிரி இருக்கும். ஒரு தடவை பஸ்ல ஒருத்தர்கிட்ட சைகைல பேசி சண்டையே வந்திடுச்சு. இந்த சினிமாக்காரங்க தான் இப்படி பண்றாங்கன்ன, நமக்கெதுக்கு நண்பா நடிப்பெல்லாம்.
இந்தியாவில் பொய்களின் எண்ணிக்கையை அதிகரித்ததும் செல் தான். எங்க வரான்னு எவனையாவது கேளுங்க, முப்பது தடவை கேட்டாலும், " டர்னிங்ல இருக்கேன் மாப்ள', சிக்னல்ல இருக்கேன் மச்சான்'ன்னே தான் சொல்லுவான். போன பண்ணிட்டு சில அப்பாட்டக்கர்கள் யார்ன்னு சொல்ல மாட்டனுங்க. யாரு பேசறீங்கன்னு கேட்டா, 'நான்தான்'ன்னுப்பாங்க. இவனுங்க பெரிய எஸ்.பி.பாலசுப்ரமணியம், யேசுதாஸு இவிங்க குரலை பார்த்தே நாம கண்டுப்பிடிக்கனும். பானை வாயனுங்களா, மெசேஜ் அனுப்புற மாதிரி பாம் அனுப்ப முடிஞ்சா, உங்க காதுக்குள்ளையே குண்டு வச்சிருப்பேன்.
இந்த கம்ப்யூட்டர் ரெக்கார்டட் வாய்ஸ நிஜமுன்னு நம்புனவேல்லாம் உண்டு, " நீங்கள் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார்'ன்னா, இவனுங்க 'சின்ன சண்டை தான், பரவாயில்லை கோவிச்சுக்காம உள்ள வந்து பேச சொல்லுங்க'ம்பானுங்க.!
இந்த கஸ்டமர் கேர் கால், அட்வர்டைஸிங் காலெல்லாம் எக்ஸ்ட்ரா இம்சைகள். 'ஹலோ, நாங்க ஓஸிஓஸிஓ பேங்க்ல இருந்து பேசுறோம், லோன் வேணுமா?' இதான்யா நான் அதிகமா செல்லுல கேட்ட வார்த்தைகள். ஆமா புள்ள, எனக்கும் லோனு வேணும், நாலு மெடிக்கல் காலேஜ், பத்து இஞ்சினியரிங் காலேஜ் கட்டலாம்னு இருக்கேன், லோன் தருவீங்களான்னு கேட்டேன், அதுக்கு அப்புறம் அந்த பொண்ணு இன்னவரைக்கும் கூப்பிடல.
இந்த செல்போன்கள் வந்தப்புறம், வீட்டு லேண்ட் லைன் போனால இருக்குற ஒரே நன்மை, செல்போன காணாம போயிட்டா, இதுல ரிங் விட்டு அத புடிக்கிறது மட்டும் தான்.!
சாப்பிடறப்போ, தூங்கப்போ, ஏன் பாத்ரூம் போறப்ப கூட செல்லோடையே அலையுறாங்க, இவங்க பொண்டாட்டியோட இருந்ததை விட போனோட இருந்தது தான் அதிகம்.!
நாட்டுல பல பேரு, செல்போன்ல எதுவுமே வராட்டியும் அடிக்கடி எடுத்து பார்க்கும் செலேரியா என்னும் நோயினால் பாதிக்கப்பட்டு இருக்காங்க. மீதி பேரு சம்பந்தமே இல்லாட்டியும் மெசேஜோ, போனோ பண்ணும் கால்ரா என்னும் நோயினால் பீடிக்கப்பட்டு இருக்காங்க. வரும் வருடங்களில் கிட்னி, லிவர், நுரையீரல் போல செல்போனும் மனிதர்களின் உடல் உறுப்புகளில் ஒன்றாக மாறிவிடும் என ஒரு கடுப்புகணிப்பு சொல்கிறது. செல்போன் என்பது வேகமாக தகவல் பரிமாறவும், தூரங்களை கடந்து விரைந்து பேசுவதற்காகவும் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கருவி, இன்னைக்கு அதை வச்சு பேசுவதை தவிர எல்லாத்தையும் பண்ணிக்கிட்டு இருக்கோம்.!