Tuesday, August 14, 2012

Diet.!


சில இந்தியர்களுக்கு இருப்பது வயிறா? வெட் கிரைண்டரா'ன்னே தெரியல, எப்போதும் எதையாவது அரைச்சுக்கிட்டே இருக்காங்க. இந்தியாவில் சாப்பாடு கிடைக்காம செத்தவங்களை விட கண்ட கண்ட சாப்பிட்டு நோய் வந்து செத்தவங்க தான் அதிகம். போனவாரம் கறிக்கடையில் ஓங்கி அடிச்சா ஒரு டன் வெயிட்டுள்ள சிறு வயசு தம்பி ஒருத்தரு ஆறு நாட்டுகோழி வெட்ட சொன்னாரு, அட பாவி என்ன குடும்பம்டா இதுன்னு ஆச்சரியப்படுற நேரத்தில், 'ஏன் தம்பி இவ்வளவு கம்மியா வாங்குறீங்க'ன்னு வெடிகுண்டு போட்டாரு கடைக்காரரு. அந்த தம்பி சொன்ன பதில்ல என உடம்புக்கு மட்டும் 8 .2 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் வந்திடுச்சு, பதில் இதுதான் 'போதும்ண்ணே, வீட்டுல எல்லோரும் ஊருக்கு போயிருக்காங்க, நான் மட்டும் தான்'...

பணமில்லாதவன் வயிறு நிறைக்க ஓடுவதும், பணக்காரன் வயிறு குறைய ஓடுவதுமே இன்றைய தற்கால சமூக நிகழ்வு. சினிமா படங்களில் டூயட் காட்சிகள் எப்படி தவிர்க்க முடியாததோ, அதே போலத்தான் வாழ்கையில் 'டயட்' ஸீன் காட்சிகளும் தவிர்க்க முடியாதவை.வாயற்ற வாழ்வே நோயற்ற செல்வம். வாயை கட்டுப்படுத்தினால், நோயை கட்டுப்படுத்தலாம் என்பதால் இதோ சில டயட் டிப்ஸ்.

வாழத்தான் சாப்பிடுகிறோமே தவிர சாப்பிடுவதற்காக வாழவில்லை என வலது கையில் பச்சை குத்திக்கொள்ளலாம்.

வாயால் சாப்பிடுவதை குறைத்து கண்ணால் சாப்பிட்டு பழக வேண்டும்.

மனைவி சொல்வதற்கெல்லாம் தலையாட்டினாலும், சாப்பாடு போடட்டுமா? இன்னொரு தோசை? எனும் போது மட்டும் தலையை இடமும் வலமுமாக அசைக்க வேண்டும்.

பொரியை அரிசியாய் பாவித்து சாம்பார், ரசம், தயிர் ஊத்தி சாப்பிட்டால், நாம் சாப்பிடும் அளவு ஆட்டோமேட்டிக்காய் குறையும்.

டிவி பார்க்கும் பொழுது, கண்ணும் காதும் மட்டுமே திறந்திருக்க வேண்டும். தப்பிதவறியும் வாயை திறந்திட கூடாது.

சாப்பிட்டுவிட்டு வாக்கிங், ஜாக்கிங் போவதை விட வாக்கிங், ஜாக்கிங் போய்க்கொண்டே சாப்பிடுவது நல்லது.

வாரத்தில் ஏழு நாட்களும், மாதத்தில் முப்பது நாட்கள் மட்டும் உண்ணா விரதம் இருக்கலாம்.

வாக்கிங்கை அதிகரித்து விட்டு டாக்கிங்கை குறைப்பது நல்லது.

சாப்பாட்டை கைகளால் எடுத்து சாப்பிடும் பழக்கத்தை விட்டுவிட்டு, தட்டிலிருந்து வாயினால் எடுத்து சாப்பிடும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

ஒரு இட்லி அல்ல ஒரு தோசை சாப்பிட்டு பழகவேண்டும், சாப்பாட்டுக்கு முன்போ பின்போ அல்ல, சாப்பாடே அதுதான்.

வீடு கட்டும் போதே, சமையலறையை ஒரு கிலோமீட்டர் தூரம் தள்ளி கட்டிவிட வேண்டும்.

ப்ரிட்ஜுன் மேலே, மாமியார் வீடு என்னும் ஸ்டிக்கர் ஒட்டிவிட்டால், அதை திறக்கவே மனசு வராது.

எப்போதுமே விலங்குகளின் மக்கள்தொகை குறைய விடமாட்டேன் என சத்தியம் பேணலாம்.

மனிதர்களின் பிரச்சனையே வாய் தான், அந்த வாயை தேவையில்லாத போது சாப்பிடவும், பேசவும் திறக்காமல் இருந்தாலே போதும், உடலும் உள்ளமும் நன்றாக இருக்கும். கவிபேரரசு வைரமுத்து சொன்னது போல சாப்பிட 'பசியோடு உட்கார்ந்து பசியோடு எழுந்தால்' எந்நாளும் வாழ்வு சுகமே.

No comments:

Post a Comment